எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label மங்கை. Show all posts
Showing posts with label மங்கை. Show all posts

இனிமையான வெறுமைகள்!







வீசி வரும் தென்றல்
உன்னில் உதிர்த்துவிட்டு
செல்லும் சூடுமலர் - என்னில்
கோர்த்துக்கொள்ளமுடிவதில்லை.,

பரவசப்பட்டு நீ எங்கோ
ஓடுகையில் தெறித்து
சிதறிய கொழுசின்
மணி தேட முடிவதில்லை.,

எப்பொழுதாவது சிக்கிக் கொள்ளும்
நீளக் கூந்தலை நீ விடுவிக்கையில்
விடுதலையாகும் ஒற்றைமுடியை
என்னோடு ஒட்டிக்கொள்ளமுடிவதில்லை.,

பயணப் படுகையில் பள்ளிக்கு
கூட்ட நெரிசலின் இடையில்
படியில் நின்று,ஒரு பயணச்சீட்டு - உன்னில்
கேட்டுப்பெற முடிவதில்லை.,

மின்னல் சிந்தனைகளில் நீ
அறியாது செய்கையில்
தெரியாது உடைந்து விழும்
கண்ணாடி வளையலில் என்
முகம் இரசிக்க முடிவதில்லை.,

கடந்து சென்றபின் - நீ
நடந்து விட்டுச் சென்ற
பாத சுவட்டில் என் கால்கள்
சிக்கிக் கொள்ள முடிவதில்லை.,

பேசிக்கொண்டிருக்கையில் அனிச்சையாய்
கரத்தில் ஒட்டிய பொட்டை
என் சுவர் தேவதையின்
நெற்றியில் அழகு பார்க்கமுடிவதில்லை.,

மறதியோடு நீ
கொடுத்து விட்டுச் சென்ற
வெள்ளை நிற கைக்குட்டையில்
ஒளிந்திருக்கும் உன் வாசம்
நான் கொள்ள முடிவதில்லை.,

*******
*******
*******

இனிமையாய் தானிருக்கிறது
இந்த வெறுமைகளும்
உன்னில் என்பதால்
மட்டும்!